மனைவி சம்மதமின்றி கணவன் உறவு! பலாத்காரமாக அறிவிக்க கோரும் வழக்கில் அப்பீல்! மத்திய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டால் அதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகள் அளித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திருமண உறவுகளில் விருப்பமின்றி பலாத்காரம் செய்யப்படுவதை குற்றமாக அறிவிக்கக் கோரி ரிட் ஃபவுண்டேஷன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில், பலாத்காரம் என்பது திருமணமான பெண்களுக்கு பொருந்தாது என்பதாக பாரபட்சமாக உள்ளது. மனைவியின் விருப்பம் இல்லாமலேயே கணவன் உடலுறவு கொள்வதும் பலாத்காரம்; ஆகையால் அதுவும் குற்றம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
.

அரசியல் சாசனத்தின் 375-வது பிரிவு
இது தொடர்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 375 பிரிவின் கணவருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்க வேண்டும் என்பதும் இம்மனுவின் கோரிக்கை. இந்த சரத்தானது, மனைவியிடம் கணவன் அனுமதி இல்லாமல் பாலியல் உறவு மேற்கொண்டால் அது பாலியல் பலாத்காரம் இல்லை என விலக்கு அளிக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மத்திய அரசின் நிலை இதுதான்!
அதேநேரத்தில் மென் வெல்ஃபர் டிரஸ்ட் என்ற ஆண்களுக்கான ஒரு அமைப்பும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், திருமணமான பெண்களை கட்டாயப்படுத்துவதைத் தடுக்க பல சட்டங்கள் இருக்கின்றன; ஆகையால் திருமணமான பெண்களை கணவன் பலாத்காரம் செய்வதற்கு தனிச்சட்டம் தேவை இல்லை என தெரிவித்தது. இவ்வழக்கில், கணவர் பலாத்காரமாக உடலுறவு வைப்பதாக குற்றமாக அறிவித்தால் குடும்ப அமைப்பு முறையே சிதையும் என பதில் தந்தது மத்திய அரசு.

மாறுபட்ட தீர்ப்புகள்
இந்த வழக்கை நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். மனைவியை கட்டாயப்படுத்தி அவரது விருப்பமே இல்லாமல் உறவு கொள்வதும் குற்றம்தான்; ஆகையால் கணவருக்கு விலக்கு அளிக்கும் 375-வது பிரிவு சட்டவிரோதமானது என்றும் மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உடலுறவு கொள்வது ,குற்றமாகாது என்றும் இரு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதிக்கபப்ட்டது.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோடீஸ் அனுப்புமாறு இன்று உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications