செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, செந்தில் பாலாஜி வழக்கின் மற்றொரு மேல்முறையீட்டு வழக்குடன் சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா, ஆட்கொணர்வு மனு வழக்கிலும் ஒரு மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பளித்தனர். இதனையடுத்து 3-வது நீதிபதி கார்த்திகேயன் இவ்வழக்கை விசாரித்தார். இவ்விசாரணையில் மேகலாவின் ஆட்கொணர்வு மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேகலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நேற்று மேகலா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறையோ எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை செந்தில் பாலாஜி வழக்கின் முந்தைய மேல்முறையீட்டு வழக்குடன் இணைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications