பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? ஆளுநருக்கு சரமாரி கேள்வி
டெல்லி: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் கொடுத்தது யார் என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அப்போது பொன்முடியின் தண்டனையையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் ஒருவர் தனது பதவியை இழப்பார். அது போல்தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் பொன்முடி தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை இழந்தார்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை பொன்முடி வழக்கில் அளித்தது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி திரும்ப கிடைத்துவிட்டது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டது.
இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலுடன் முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஆளுநரோ பொன்முடியின் தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது குற்றவாளிதான் எனவே அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என கறாராக கூறிவிட்டார்.
இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களை தெரிவித்தது.
உச்சநீதிமன்ற அமர்வு , "பொன்முடியின் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்டது. அதன் பிறகு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. ஒரு ஆளுநரே அரசியலமைப்பு சட்டத்தை மீறினால் மாநில அரசு என்ன செய்யும்.
ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டம் தெரியுமா தெரியாதா. ஒருவரின் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவருக்கு தண்டனையே விதிக்கப்படவில்லை என்பதுதானே அர்த்தம். அப்படியிருக்கும் போது பொன்முடியை எப்படி கறைபடிந்தவர் என கூறமுடியும். எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீறிவிட்டார்" என அந்த அமர்வு காட்டமாக தெரிவித்தது.












Click it and Unblock the Notifications