பொன்முடி கறை படிந்தவர் என்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ரவி-நீதிபதி பர்திவாலா கண்டனம்
டெல்லி: திமுகவின் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பின்னரும் அவரை கறை படிந்தவர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும் என நீதிபதி பர்திவாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பொன்முடி எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை நிறுத்தி வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால் ஆளுநர் ரவியோ, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று ஆளுநர் ரவிக்கும் மத்திய அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி பர்திவாலா, ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு விதித்த சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துவிட்டது. இதன் பின்னரும் பொன்முடியை கறைபடிந்தவர் என எப்படி ஆளுநர் ரவி கூற முடியும்? இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும் எனவும் கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications