டெல்லியில் தேர்தலுக்கு முன் வெளியே வருவாரா அரவிந்த் கெஜ்ரிவால்? நாள் குறித்தது சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் மறுத்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்றால், நாங்கள் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம். அதனால் இருதரப்பும் தயாராக வர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
நேற்று இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இடைக்கால ஜாமின் வழங்கினால், அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தது. அதற்கு அவர்களும் கையெழுத்திட மாட்டார் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது.
அடுத்த விசாரணை நாளை மறுநாள் (மார்ச் 10) அல்லது அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை மே 10ஆம் தேதி) இது தொடர்பான விசாரணை நடைபெறும். அன்றைய தினம் இடைக்கால ஜாமின் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி தொடர்பான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கெஜ்ரிவால் வழக்கு விசாரணை பட்டியல் குறித்து விளக்கம் கேட்டதையடுத்து, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா எம். திரிவேதி ஆகியோருடன் மாறுபட்ட அமர்வில் அமர்ந்திருந்த நீதிபதி கன்னா இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா என்பது வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும். டெல்லியில் வரும் மே 25ஆம் தேதியும், பஞ்சாப்பில் ஜூன் 1ஆம் தேதியும் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அது ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்சார ரீதியில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications