"ராகுல் நீங்க எல்லையில் போய் பார்த்தீர்களா? ஆதாரம் என்ன?" சீன ஆக்கிரமிப்பு.. சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: இந்தியா சீனா மோதல் மற்றும் இந்தியப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் பேசுவதற்குப் பதிலாக சோஷியல் மீடியாவில் இது குறித்துப் பேச என்ன காரணம் என்று கேட்டனர். மேலும், சீனா ஆக்கிரமிப்பு குறித்துப் பேச என்ன ஆதாரம் இருக்கிறது! அங்கு நேரில் சென்று பார்த்தீர்களா என்றும் கேள்வி எழுப்பினர்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தி நாடு முழுக்க பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அப்படி தான் ஒரு முறை ராகுல் காந்தி, இந்தியாவின் 2,000 சதுர கிலோமீட்டர் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாகப் பேசியிருந்தார்.

ராகுல் காந்தி
மேலும், அருணாச்சல பிரதேசத்தில் சீனா நமது வீரர்களைத் தாக்குவதாகவும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக ராகுல் காந்தி மீது அவதூறு புகாரும் அளிக்கப்பட்டது. இதற்கிடையே தன் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கக்கூறி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விவகாரங்களை சமூக வலைத்தளங்களில் சொல்வது ஏன் என ராகுல் காந்தியிடம் காட்டமான கேள்விகளை எழுப்பினர். மேலும், இப்படி எல்லாம் சொல்ல என்ன ஆதாரங்கள் உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சரமாரி கேள்வி
நீதிபதிகள் மேலும், "ஏன் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ளார்கள்? இதை ஏன் நாடாளுமன்றத்தில் கேட்கவில்லை.. 2000 சதுர கி.மீ பரப்பளவிலான நிலத்தைச் சீனா கைப்பற்றியதாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. இது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு நம்பகமான ஆதாரம் என்ன? நீங்கள் அங்குச் சென்று பார்த்தீர்களா என்ன?
ஒரு உண்மையான இந்தியர் இப்படி எல்லாம் சொல்லமாட்டார். எல்லையில் மோதல் நடக்கும்போது, இப்படி எல்லாம் பேச முடியுமா? நாடாளுமன்றத்தில் இந்தக் கேள்வியை நீங்கள் ஏன் கேட்க முடியாது? உங்களுக்குப் பேச்சுரிமை இருப்பதால் எதையும் பேச முடியும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்" என்று காட்டமான கேள்விகளை எழுப்பினர்.
ராகுல் தரப்பு வாதம்
அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "சீனா உடனான மோதலில் நமது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு உண்மையான இந்தியன் கவலைப்படக்கூடிய விஷயம் தானே" என்றார். இதற்குப் பதிலளித்த நீதிபதி தத்தா, "எல்லை தாண்டிய மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானதா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குச் சிங்கி, எல்லை மோதல் தொடர்பாக உண்மையான தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் தகவல்களை மறைக்கக்கூடாது என்பதற்காகவே ராகுல் காந்தி இப்படிப் பேசியதாகத் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கேள்விகளை எழுப்பச் சரியான இடங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றம் தடை
இதையடுத்து ராகுல் காந்தி தனது விமர்சனங்களை முன்வைக்க இன்னும் கூட சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என்பதை சிங்வி ஒப்புக்கொண்டார். அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேள்விகளை எழுப்பியதற்காகவே அவருக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக வாதிட்டார். பாரதிய நியாய சமிதா சட்டத்தின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்குத் தடை விதித்தனர். மேலும், இது தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications