எஸ்ஐஆர் வழக்கு: குடும்ப அட்டையில் பெயர் இருந்தால் வாக்காளராக முடியுமா? ECக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: எஸ்ஐஆர் பணிகளை தள்ளிவைக்க கோரி கேரளா, மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "குடும்ப அட்டையில் பெயர் இருந்தால் அவரை வாக்காளராக்க முடியுமா?" என்று தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர்.
எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக கூட்டணி கட்சிகள் ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. கேரளா, மேற்கு வங்க அரசு சார்பிலும் எஸ்.ஐ.ஆர் பணிகளை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, எஸ்.ஐ.ஆர் பணிகள் விவகாரத்தில் தேவையற்ற பயத்தை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் பாதிக்கவில்லை என்று மாநில தேர்தல் கமிஷனும் கூறியுள்ளது என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளித்தனர். மேலும், கேரள அரசின் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கும், திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கும் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
பின்னர் எஸ்.ஐ.ஆர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை எதிர்த்த பிரதான மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் கூறுகையில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது வாக்காளரின் பொறுப்பாகாது..
சட்டத்துக்கு முரணானது
எனவே விடுபட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். 2 மாதங்களுக்குள் எஸ்.ஐ.ஆர் பணியை நிறைவு செய்ய முடியாது. மேற்கு வங்கம், பீகாரின் தொலைதூர கிராம மக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கூட தெரியாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தவறானது; அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது," என்றார்.
தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி
அப்போது நீதிபதிகள், "வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்க்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆதார் குடியுரிமைக்கான ஆவணமாக கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களில் ஒன்றாக ஆதார் எண் இருக்க வேண்டும் என்று தெரிவித்தோம். அரசின் திட்டங்களின் பலன்களை பெறுவதற்காக ஆதார் எண் உருவாக்கப்பட்டது. குடும்ப அட்டையில் பெயர் இருந்தால் அவரை வாக்காளராக்க முடியுமா?" என்று தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications