என்ன பேசுகிறோம் என கவனத்துடன் பேசணும்.. எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அரசியலில் உள்ளவர்கள் என்ன பேசுகிறோம் என கவனத்துடன் பேச வேண்டும் எனவும் எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா மீது ஈரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தந்தை பெரியார் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் ஈரோடு போலீசார் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஈரோடு போலீசார் தம் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா மனுத் தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எச்.ராஜா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் எச்.ராஜாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. எச்.ராஜா மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்ய முடியாது என கூறி எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் அரசியலில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து கொண்டு கவனத்துடன் பேச வேண்டும் எனவும் எச்.ராஜாவுக்கு அறிவுறுத்தல் விடுத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications