தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- வேதாந்தா குழுமத்துக்கு கறார் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் தமிழ்நாடு அரசு அனுமதிக்காத எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என வேதாந்தா குழுமத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு அனுமதித்த கழிவுகளை மட்டுமே அகற்ற வேதாந்தா குழுமத்துக்கு உரிமை உள்ளது. தமிழ்நாடு அரசு அனுமதிக்காத எந்த பணியையும் ஸ்டெர்லைட்டுக்குள் செய்ய வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி கிடையாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கையையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி: தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தை பாழ்படுத்தியது நாசகார ஸ்டெர்லைட் ஆலை. இதனை மூட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது.
இதன்பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறக்க வேதாந்தா குழுமம் முயற்சித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பராமரிப்பு பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி அண்மையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைதான் இன்று நடைபெற்றது.












Click it and Unblock the Notifications