தமிழகம் உள்ளிட்ட 11 மாநில சிறைகளில் ஜாதி பாகுபாடு வழக்கு- தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களின் சிறைகளின் கையேடுகளில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களின் சிறை கையேடுகளில் ஜாதிய பாகுபாடு உள்ளது என்பது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு. இந்த பொதுநலன் வழக்கில், சிறைகளில் ஜாதிய அடிப்படையில் கைதிகளுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது; சிறை பணிகளும் ஜாதிய அடிப்படையில் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவின் சமூக ஆர்வலர் சுகன்யா சாந்தா இந்த பொதுநலன் வழக்கை தொடர்ந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இப்பொதுநலன் வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர் சுகன்யா சாந்தா சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முரளிதர், சில மாநிலங்களில் பழங்குடிகள் தொடர்ச்சியாகவே இத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.
இந்த பொதுநலன் மீது தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்; பதில் மனுவை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்து இன்று தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
11 மாநிலங்கள் எவை: உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஒடிஷா, ஜார்க்கண்ட், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில்தான் ஜாதிய பாகுபாடு பின்பற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது,.












Click it and Unblock the Notifications