பண மோசடி வழக்கு.. சிக்கலில் செந்தில் பாலாஜி.. ஹைகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2015ம் ஆண்டு ஜூலையில் அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பதவியிலிருந்தும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நீக்கினார்.
கடந்த 2014ம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் அசோக்குமார், தனி உதவியாளர் சண்முகன் மற்றும் எம்டிசி ஊழியர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
பழைய வழக்கு.. புது கணக்கு.. 'நெருக்கும் டெல்லி'.. செந்தில் பாலாஜியின் அட்வான்ஸ் மூவ்.. தப்பிப்பாரா?
பணமோசடி புகார்
கடந்த 2015ம் ஆண்டு சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, எம்டிசியில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மெக்கானிக் பணியில் சேர விரும்பிய நபர்களிடம் பெரும் தொகையை பாஸ்கர் மற்றும் சக ஊழியர்கள் பழனி, கேசவன் மற்றும் பலர் சேர்ந்து வசூலித்து ஏமாற்றியுள்ளனர். தேவசகாயம் என்பவரின் மகனுக்கு பேருந்து நடத்துநர் பணிக்காக ரூ.2,60,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் குற்றப்பத்திரிகை
இந்த ஊழலில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் 2016ம் ஆண்டு அளித்த புகாரின்படி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் மற்றும் மைத்துனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ரூ.2.31 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஏப்ரல் 2019 இல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் வசூலித்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வழக்கு ரத்து
பின்னர் ஏமாற்றப்பட்டவர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர், பின்னர் 2021 இல், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் பணம் செலுத்தும் சர்ச்சையை சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர். சமரசம் மற்றும் சண்முகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கிரிமினல் வழக்கை ரத்து செய்தது. திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சரானதும், புகார்கள் வாபஸ் பெறப்பட்டது சர்ச்சையானது. சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையின் அறிக்கையை ஏற்று, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை ரத்து செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில், அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் தனக்கு அரசு வேலை வழங்காமல், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க தகுதிப் பட்டியலில் சேர்த்திருந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் அமைச்சரின் தனி உதவியாளர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஊழல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இரு தரப்பு வாத விவாதங்களும் முடிவடைந்தன. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு, செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.