சடங்குகள் இல்லையெனில் இந்து திருமணங்கள் செல்லாது- ஆட்டம், கும்மாளம் கல்யாணம் இல்லை- உச்சநீதிமன்றம்!
டெல்லி: இந்து திருமணம் என்பது இந்து மத சடங்குகள் அடிப்படையில் முறையாக நடத்தப்படக் கூடியது மட்டும்தான்; அத்தகைய திருமணங்கள்தான் இந்து திருமணங்களாகவும் செல்லும்; திருமணம் என்பது வெறும் ஆட்டம், பாட்டு, குடி, கூத்து என்பவை மட்டுமே அல்ல என உச்சநீதிமன்றம் கடுமையாக தெரிவித்துள்ளது.
திருமண சட்டங்கள், திருமணங்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவை தொடர்பான ஏராளமான பொதுநலன் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அத்துடன் உத்தரப்பிரதேசத்தை தம்பதியினர், தங்களது திருமணம் முறைப்படியான சடங்குகளுடன் நடைபெறவில்லை. திருமண சான்றிதழுக்குதான் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். ஆகையால் எங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நாகரத்தினா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்த கருத்துகள்: இந்து திருமணம் என்பது மிகவும் புனிதமானது. இந்திய சமூக அமைப்பில் மதிப்புக்குரியது. இந்து திருமண முறைகளுக்கான உரிய மரியாதையையும் அந்தஸ்தையும் நாம் வழங்கியாக வேண்டும். திருமண பந்தத்தில் ஆண்களும் பெண்களும் நுழைவதற்கு முன்னதாக ஆழமாக சிந்தித்தாக வேண்டும். திருமணம் என்பது வெறும் ஆட்டம், பாட்டம், குடி, கூத்து, வரதட்சணை வாங்குதல், பரிசுப் பொருட்களைப் பெறுதல் என்பது மட்டுமே அல்ல. திருமணம் என்பது ஒரு வர்த்தகப் பரிமாற்றமும் பரிவர்த்தனையும் அல்ல. இந்திய சமூக அமைப்பின் அடிப்படையே திருமணம்தான். இது புனிதமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது திருமணம் என்பதே பல்வேறு "நடைமுறை காரணங்களுக்கான" ஒரு நிகழ்வாக உருமாற்றப்படுவதை பல நிகழ்வுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அக்னி சாட்சியாக, இந்து மதச் சடங்குகளுடன் நடத்தப்படுகிற திருமணம்தான் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லத்தக்க திருமணம். விசா பெறுவது போன்ற காரணங்களுக்காக "நிகழ்ச்சியாக" நடத்தப்படுகிறவை இந்து திருமணமாக செல்லத்தக்கதும் அல்ல.
இத்தகைய முறைப்படுத்தப்படாத திருமணங்கள் சமூக அமைப்பில் பல்வேறு எதிர்விளைவுகளையும் மறைமுக தாக்கங்களையும் உருவாக்கி வருகிறது. அப்படியான சடங்குகளை நடத்தாமல் ஆண், பெண் இருவரும் கணவன், மனைவி என்ற தகுதியையும் பெற முடியாது. ஒரு ஆணும் பெண்ணும் கணவன் - மனைவி என்ற தகுதியைப் பெற முறையான சடங்குகளுடன் திருமணங்களை நடத்த வேண்டும். இந்துத் திருமணச் சட்டங்களும் முறைப்படியான இந்து மத சடங்குகளுடன் நடத்தப்படுகிற திருமணங்களைத்தான் இந்து திருமணம் என அங்கீகரிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications