வில்சன் சொன்னது தவறா? அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையையும் நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: கரூர் பலி குறித்து, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டிருந்தது. தற்போது வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், ஆணையத்தின் விசாரணை பாதிக்கப்படாது என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கூறியிருந்தார். ஆனால், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையும் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது, விசாரணை CBI-க்கு மாற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அல்லது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது, இந்த ஆணையங்கள் இனி செயல்பட வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"(i) விசாரணை மாற்றம்:
கரூர் டவுன் காவல் நிலையத்தில் 27.09.2025 அன்று பதிவு செய்யப்பட்ட FIR எண் 855/2025 தொடர்பான விசாரணை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
(ii) அதிகாரிகளை நியமித்தல்:
விசாரணையை எடுத்துக் கொள்வதற்காக, CBI இயக்குநர் உடனடியாக ஒரு மூத்த அதிகாரியையும் அவருக்கு உதவியாக மற்ற அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.
(iii) ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஒப்படைத்தல்:
கரூர் டவுன் காவல் நிலையத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர், தனி நீதிபதியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மற்றும் மாண்புமிகு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஆகியவை, FIR மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆவணங்கள், டிஜிட்டல் அல்லது பிற ஆதாரங்களை, மேலும் விசாரணைக்காக உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

(iv) சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் ஒரு நபர் விசாரணை ஆணையம் நிறுத்திவைப்பு:
விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது, அவை செயல்பட வேண்டியதில்லை.
(v) மாநிலத்தின் ஒத்துழைப்பு:
தமிழ்நாடு அரசு இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும், தேவைப்பட்டால், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, வில்சன் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அதில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், விசாரணை மேற்கொள்ள தடையில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications