மீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம்
டெல்லி: இந்திய கடல் பகுதிக்குள் கேரள மீனவர்கள் இரண்டு பேரை இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் இருந்த அந்த நாட்டின் இரு கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற வழக்கை முடித்துக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான செயின்ட் ஆன்டனி என்ற விசைப்படகில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிளைமன்ஸ், கில்சரியான், ஹில்லாரி, பிரான்சிஸ், ஜான்சன், முத்தப்பன், மார்டின், மிக்கேல் அடிமை மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள் கேரளா மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் 2012ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ம் தேதி, மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, இத்தாலி நாட்டைச் சார்ந்த 'என்ரிகா லாக்ஸி' என்ற எண்ணெய் சரக்குக் கப்பலிலிருந்த இத்தாலி நாட்டுப் படை வீரர்கள் இருவர் துப்பாக்கியால் அத்துமீறி சுட்டனர். இதில் அஜிஸ்பிங்க் மற்றும் ஜலஸ்டின் ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

இத்தாலி கடற்படையினர் கைது
உடனிருந்த 9 மீனவர்களும் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணமான இத்தாலி கப்பலின் மாலுமிகளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். வழக்கு எர்ணாகுளத்திலுள்ள கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு, இத்தாலி மேல்முறையீடு செய்ததால் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

செவ்வாய்க்கிழமை உத்தரவு
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வேண்டுகோளை நாங்கள் ஏற்று வழக்கை முடிக்க சம்மதிக்கிறோம். வரும் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை முடித்து வைத்தது தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிதி பங்கீடு
அதே நேரம் மீனவர்களுக்கான இழப்பீட்டு தொகை கேரள உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், சிக்கல்கள் இல்லாமல் அந்த நிதி உரியவர்களுக்கு சென்று சேர்வதற்கு அதுதான் வழி செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாதிடும்போது, நீதிமன்றம் கூறிய இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். கேரள அரசின் வழக்கறிஞர், இத்தாலி சார்பிலான வழக்கறிஞரும் இதையே வழிமொழிந்தனர்.

பிரமாண பத்திரம்
கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மத்திய அரசு இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் இழப்பீடு தொகையாக இத்தாலி அரசு 10 கோடி ரூபாய் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 கோடி கொடுக்கப்படும் எஞ்சிய 2 கோடி ஏற்கனவே இத்தாலிய அரசால், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது, படகில் பயணம் செய்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அதன் உரிமையாளருக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசு கோரிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வாதிடும்போது பாதிக்கப்பட்ட 2 மீனவர்கள் குடும்பத்துக்கும் போதிய அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு விசாரணையை முடித்து வைக்க வேண்டும் என்றும், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு விசாரணையையும் உச்சநீதிமன்றமே முடித்து வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையெல்லாம் பரிசீலனை செய்து உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கை முடித்து வைப்பதற்கு முன் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications