ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரும் மனுக்கள்- விரைவில் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று உறுதியளித்துள்ளது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் விரைவாக விசாரிக்கும் என்பது எதிர்பார்ப்பு.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவும் ரத்து செய்யப்பட்டது.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்; ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மாநில அந்தஸ்து வழங்க கோரி தாக்கல் செய்த மனுக்களை விரைவாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டிடம் மூத்த வழக்கறிஞர் கோபால் நாராயணன் இன்று முறையிட்டார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி அளித்தார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications