ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்குகள்- உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட இருக்கிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு மற்றும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், கோப்புகளுக்கு ஒப்புதல் அனுப்பாமல் இருப்பது ஆகியவை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகளில்தான் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவிட இருக்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், அரசின் கோப்புகள் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பது இல்லை; ஒப்புதல் அளிக்காத கோப்புகளை விரைந்து திருப்பியாவது அனுப்ப வேண்டும்; ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ மசோதாக்கள் மற்றும் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்துள்ளார் என்பது ஒரு ரிட் மனு. இந்த மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பெஞ்ச் விசாரித்தது. இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ராவும் இடம் பெற்றிருந்தனர். அப்போதுதான், இந்த மோதல் தீவிரமான கவலை தரக் கூடியது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் குறுக்கீடு தொடர்பாக மற்றொரு ரிட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது. அதாவது துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி தலைவரை சேர்க்க வேண்டும் என்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டுக்கு எதிராக இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த இரண்டு ரிட் மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் வில்சன் எம்பி மற்றும் அபிஷேக் சிங்வி ஆஜராகினர். அப்போது தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான தொடர்ச்சியான மோதல்கள் குறித்து தமிழக அரசு தரப்பில் விவரிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜரானார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநர் விவகாரத்தில் பழைய நிலைதான் தொடருகிறதா? முடிவு எட்டப்படவில்லையா? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை ஒருவாரத்துக்கு ஒத்திவைக்கிறோம்; அதற்குள் மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஒரு தீர்வைக் காண வேண்டும்; அப்படி தீர்வு ஏற்படாத நிலையில் நாங்களே இந்த பிரச்சனைக்கு தீர்வை முன்வைப்போம் என கறாராக தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக தமிழ்நாடு அரசின், ஆளுநருக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் பிறப்பிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications