எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு.. சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி
டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது அக்டோபர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தது, வண்டலூர் - வாலாஜா சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதில் முறைகேடு உள்ளிட்டவை அந்த வழக்கில் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூலை மாதம் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் டிஸ்மிஸ் செய்தார்.
இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேபோன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதிகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடு முழுவதும் எதிர்கட்சியினர் மட்டுமே வழக்குகளை எதிர்கொள்வதாகவும் ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை எதிர்கொள்வதில்லை என்றும் கருத்து கூறினர். வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications