சீமான் மீதான நடிகை பலாத்கார வழக்கு! நாளை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்! எந்த அமர்வு தெரியுமா?
டெல்லி: நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் 376 ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும் தனக்கு 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக சீமான் மீது அந்த நடிகை ஆதாரங்களுடன் சில புகார்களை அளித்ததாகவும் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீஸார் இரு முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஒரு வழியாக நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு ஆஜராகினார். அப்போது அவரிடம் 63 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு போலீஸார் தெரிவித்திருந்தனர். அது போல் பெங்களூரில் உள்ள அந்த நடிகையிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே சீமானிடம் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்துகிறது. இதனால் இந்த வழக்கின் போக்கு எப்படியிருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீமான் அந்த நடிகையை தெரியவே தெரியாது என கூறி வந்த நிலையில் அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த நடிகைக்கு மாதம் ரூ 50 ஆயிரம் வீதம் 2 அல்லது 3 மாதங்கள் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். அத்துடன் ஒரு கட்டத்தில் அந்த நடிகையே விரும்பி வந்து உறவு வைத்தார், பிறகு என்னை பிடிக்காமல் போய்விட்டார் என ஒருமையில் நா கூசும் வார்த்தைகளால் பேசியிருந்தார். எல்லாவற்றையும் விட ஒரு பெண்ணுக்கு தவறான வாக்குறுதிகளை கொடுத்து அவரது சம்மதத்தின் பேரில் உறவு வைத்தாலும் அது பலாத்காரம் என நீதிமன்றங்கள் சொல்லும் நிலையில், "நான் என்ன வயசுக்கு வந்த புள்ளைய குண்டுக்கட்டாக தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து கற்பழிச்ச மாதிரி எல்லாரும் கதறிக்கிட்டு இருக்கீங்க" என அவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மத்தியில் சீமான் பேசிய வார்த்தைகளுக்கு நிறைய பெண் அரசியல் தலைவர்களும் ஆளுமைகளும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா விசாரிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications