செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? அமைச்சராகவே தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: தமிழக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி அந்த பதவியில் தொடர விரும்புகிறாரா இல்லை அதிலிருந்து விலகுவாரா என்பதை அவர் தரப்பு வழக்கறிஞர் இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். இதனால் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு அவர் மோசடி செய்ததற்காக முகாந்திரம் இருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் ஒரு ஆண்டுக்கு மேல் இருந்த அவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து அவர் ஓரிரு நாளில் மீண்டும் பவர்ஃபுல்லான மின்சாரத் துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்திருக்கும் நிலையில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை அதுவும் அவசர அவசரமாக கொடுக்க வேண்டியதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி போக்குவரத்து துறையில் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கும் அரசு தரப்பிற்கும் சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர். நீதிபதிகள், இந்த வழக்கில் எத்தனை அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக உள்ளனர் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு 200-க்கும் மேற்பட்டோர் சாட்சியங்களாக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட நீதிபதிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இத்தனை அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது எப்படி சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பினர்.
மேலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் இருக்கிறது என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் அரசு ஊழியர்கள் அவருக்கு எதிராக எப்படி சாட்சியம் அளிப்பார்கள் என நீதிபதிகள் கேட்டனர். இதனிடையே செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு முன்பு வரை தடயவியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்ததாகவும் செந்தில் பாலாஜி அமைச்சரானதும் அவர் நீதிமன்றத்திற்கு சாட்சி அளிக்க வரவில்லை என அமலாக்கத் துறை வாதம் செய்தது.
எனவே இந்த வழக்கு விசாரணை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம், இன்றைய தினத்திற்குள் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா இல்லையா என்பதை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications