சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் ரத்தா? உச்சநீதிமன்றம் இன்று பரபர விசாரணை.. பரபரக்கும் ஆந்திரா
டெல்லி: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீனை எதிர்க்கும் அம்மாநில அரசின் மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஆவார். கடந்த சட்டசபை தேர்தலில் இவரது கட்சி படுதோல்வியை அடைந்தது. தற்போது சந்திரபாபு நாயுடு எம்எல்ஏவாக உள்ளார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். இதற்கிடையே தான் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதாவது திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே தான் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க சந்திரபாபு நாயுடுவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பேலோ திரிவேதி, சதீஷ் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. ஆந்திர அரசின் மனுவுக்கு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சந்திரபாபு நாயுடுவுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஜனவரி 19ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தது. அதன்படி இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு என்பது விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications