ரூ70,000-க்கு முதுநிலை நீட் வினாத்தாள்? தேர்வை ஒத்திவைக்க கோரும் மனு-உச்சநீதிமன்றம் நாளை விசாரணை!
டெல்லி: முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 11-ந் தேதி நடைபெறும் நிலையில் முன்கூட்டிய வினாத்தாள் விற்பனையாகிவிட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு வினா ரூ70,000-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. முதுநிலை நீட் தேர்வு மையங்கள், வினாத்தாள் விற்பனை ஆகியவற்றால் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்ட மோசடி உள்ளிட்டவைகளால் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக மாநிலங்களின் சட்டசபைகள் தீர்மானம் நிறைவேற்றின. நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கப்பட்டார். மத்திய அரசும் நீட் மோசடி வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியது. நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகள் முடக்கினர்.

உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆகஸ்ட் 11-ந் தேதி முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கான மையங்கள் மற்றும் வினாத்தாள் விற்பனை ஆகியவற்றை சுட்டிக்காட்டி முதுநிலை நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பெஞ்ச்சில் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று இதை ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து முதுநிலை நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரும் பொதுநலன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications