நீட் தேர்வு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!
டெல்லி: நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசும், மக்களும் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சட்ட ரீதியாக தமிழக அரசு போராடி வருகிறது.

தமிழக அரசு
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை, சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனு
இதனிடையே அதிமுக ஆட்சியில் நீட் தேர்வினை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதியின் முக்கிய உத்தரவு
அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. தமிழக அரசின் ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு அண்மையில் விசாரித்தது. அப்போது, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணை ஒத்திவைப்பு
இந்த நிலையில் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், நீட் வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications