தேர்தல் பத்திரம் செல்லாது-சட்டவிரோதம்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- மத்திய பாஜக அரசுக்கு மரண அடி!
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை திரைமறைவில் வாரி வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது; அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும். மேலும் தேர்தல் பத்திரங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது; தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி என்பது விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சனை. அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விவகரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். ஆனால் 2018-ல் இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்த மத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது.

இந்த திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகளைப் பெற்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. இதில் பெருமளவு நிதி பெற்றது மத்தியில் ஆளும் பாஜகதான்.
இத்தகைய தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ. வங்கிதான் வெளியிடும். ரூ.1,000 முதல் ரூ1 கோடி வரையிலான பத்திரங்களை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும்.
அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியாகி பெரும் புயலை கிளப்பி இருக்கின்றன. கடந்த 2022-23ம் ஆண்டில் மட்டுமே பாஜக ரூ1,294 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்றுள்ளதாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ரூ171 கோடிதான் கிடைத்துள்ளதாம். அதாவது காங்கிரஸ் கட்சியை விட பல மடங்கு கூடுதல் நிதியை தேர்தல் பத்திரங்கள் பாஜக பெற்றுள்ளது. இதுவரையில் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் 55% பாஜகவுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மொத்தம் ரூ.12,008 கோடிக்கு விற்பனையானதில் பாஜகவுக்கு மட்டுமே .6,564 கோடி கிடைத்துள்ளது பெரும் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.
இந்த பின்னணியில் தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது; லோக்சபா ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் அம்சங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் 2109-ல் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார் என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் ஒருமித்த தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு:
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது
- தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது
- தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களது உரிமையை பறிக்கிறது
- தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது
- தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது.
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது.












Click it and Unblock the Notifications