ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும்; ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு 2019-ம் ஆண்டு ரத்து செய்தது.
அப்போது ஜம்மு காஷ்மீர் மறுவரையறை மசோதா ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த இந்த மசோதாவானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்தது. அதாவது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் என 2 ஆகப் பிரிக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துதான் சட்டசபை உண்டு; லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபையும் கிடையாது என்றது இந்த மசோதா. இது நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த 370வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்குடன் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல 2024ம் ஆண்டு செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என அதிரடியாக தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications