அயோத்தி வழக்கு.. ஜன. 10ம் தேதிக்குள் விசாரணை செய்ய நீதிபதிகள் பெஞ்ச் அமைப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதிகள் பெஞ்ச் வரும் 10ம் தேதிக்குள் அமைக்கப்பட உள்ளது.
கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியில் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள இடம் சன்னி வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களும் கடந்த 29ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்கள் புதியதாக அமைக்கப்பட இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.
அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் 10ம் தேதிக்குள் அமைக்கும் என்ற நீதிபதிகள், வரும் 10ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.