நியமனத்தில் சர்ச்சை- தலைக்கு மேலே 'சுப்ரீம் கோர்ட்' கத்தி.. தலைமை தேர்தல் ஆணையரானார் ஞானேஷ் குமார்!
டெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

டெல்லியில் இன்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். அப்போது பேசிய ஞானேஷ்குமார், 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன் அனைவரும் வாக்காளர்களாக இடம் பெற வேண்டும்; கட்டாயம் வாக்களிக்கவும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசின் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தின் கீழ்தான் தற்போது ஞானேஷ்குமார், நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொதுநலன் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் ஞானேஷ்குமார், புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டமும் எதிர்ப்பும்
தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மீறும் வகையில் கொண்டு வந்ததுதான் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம். இந்த சட்டத்தின் படி, தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு அவருக்கு பதில் மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெற வகை செய்யப்பட்டது. அதாவது பிரதமர், மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் புதிய தேர்தல் ஆணையர் நியமன சட்டம்.
இந்த சட்டத்துக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டாம் என பிரதமர் மோடி தலைமையிலான குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி இருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் எதிர்ப்பையும் புறக்கணித்து நள்ளிரவில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டார்.
தற்போது புதிய தேர்தல் ஆணையர் சட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க இருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று ஞானேஷ்குமார், தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications