முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த இன்னொரு கருத்து-‘மனைவி’யருக்கு உற்சாகம்!
டெல்லி: விவகாரத்தான முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அதிரடியாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலேயே மனைவிகளுக்கு கணவர்கள் செய்ய வேண்டிய ஆதரவு நிலைப்பாடுகள் சிலவற்றையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மனைவிகளுடன் இணைந்து வங்கி கணக்கு தொடங்குதல், ஏடிஎம் கார்டுகளை மனைவிகளும் பயன்படுத்த அனுமதித்தல் ஆகியவற்றையும் பரிசீலனை செய்யலாம் என்பதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் மனைவியை முத்தலாக் கூறி விவகாரத்து செய்தார். இது தொடர்பாக குடும்ப நீதிமன்றத்தை அந்த பெண் நாடினார். இந்த வழக்கில் தெலுங்கானா குடும்ப நீதிமன்றம், விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு ரூ20,000 மாதந்தோறும் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் சமத் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு ரூ10,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் முறையிட்டார். அதாவது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-ன் கீழ் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் சமத் தரப்பு வாதிட்டிருந்தது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது. மேலும் விவாகரத்தான முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்றும் அழுத்தம் திருத்தமாக தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.

இதே வழக்கில்தான் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு- மனைவியருக்கும் சில ஆதரவான கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதில்தான், மனைவியருடன் கணவர் இணைந்து கூட்டு அக்கவுண்ட்டுகளை வங்கிகளில் தொடங்கலாம்; மனைவியருடன் ஏடிஎம் கார்டுகளை பகிர்ந்து கொள்ளலாம். இவை எல்லாம் பெண்களுக்கான நிதிச்சுமையை குறைக்க நிதி உதவி செய்யக் கூடியவை. ஆகையால் இவற்றையும் பரிசீலனை செய்யலாம் என நீதிபதிகள் பிவி நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications