சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்கள்.. நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற தர்ணா
டெல்லி: ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் சமூக இடைவெளியுடன் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்யசபாவில் ஞாயிறன்று வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குரல் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக வேளாண் மசோதாக்கள் கிழித்து எறியப்பட்டன. சபை தலைவர் இருக்கை முன்பாக டெரிக் ஓ பிரெய்ன் உள்ளிட்ட எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது சபை தலைவர் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது.
இந்த களேபரங்களையடுத்து ராஜ்யசபா இன்று கூடியது. சபை தலைவரான வெங்கையா நாயுடு, டெரிக் ஓ பிரெய்ன் உள்ளிட்ட 8 எம்.பிக்களை ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து ராஜ்யசபாவில் தொடர்ந்து அமளி நீடித்தது. இதனால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சி எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.