டெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தில் 50% கட்டணம் நேற்று திரும்பப் பெறப்பட்டது.

இதனையடுத்து மாணவர்களை வகுப்பறைக்கு திரும்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனாலும் முழுமையாக கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இன்றைய போராட்டத்தின் போது பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. காவி உடை போர்த்தப்பட்ட இந்த சிலை விரைவில் திறக்கப்பட இருந்தது.
ஆனால் விவேகானந்தர் சிலையை சேதப்படுத்தியதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விடுதி கட்டணங்கள் 300% உயர்த்தப்பட்டதால் மாணவர்கள் கொந்தளித்து போய் போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன்னர் தெற்கு டெல்லியை போர்க்களமாக்கும் அளவுக்கு மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications