சனாதனத்தை தொழுநோய் எய்ட்ஸ் நோயுடன் ஒப்பிட்டு ஆ ராசா பேச்சு.. டெல்லி போலீசில் புகார்
டெல்லி: சனாதன தர்மம் குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுக எம்பி ஆ ராசா மீது டெல்லி வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். சனாதனத்தை தொழுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் அளித்துள்ளார்.
டெங்கு, மலேரியா, கொரோனாவைப்போல சனாதனமும் ஒன்று என்ற அர்த்தத்தில் அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். சனாதனம் குறித்து உதயநிதி பேசிய பேச்சு பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சனாதானத்தின் பெயரால் நடக்கும் தீண்டாமை கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டியது என அர்த்தத்தில் பேசியதை திரித்து பாஜகவினர் வெளியிட்டதாக உதயநிதி விளக்கமும் அளிததார்.

இந்நிலையில் சனாதனம் குறித்து பேசிய திமுக எம்பி ஹெச்.ஐ.வி வைரஸைப் போன்றது என்று தெரிவித்தார். வாக்குச்சாவடிகளுக்கான திமுக முகவர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய ஆ ராசா, "பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் நாட்டு மக்களைப் பிளவுப்படுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது.
தம்பி உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு பெரும் மகிழச்சி அடைந்தேன்.
இந்த சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் திராவிட முன்னேற்ற கழகமும், அதன் தத்துவமும் தழைக்கும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும் " என ஆராசா கூறினார்.
இதேபோல் முன்னதாக சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆ ராசா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இன்று இந்தியா முழுவதும் விவாதப்பொருள் ஆகியுள்ளது. அந்த விவாதப் பொருளுக்கு விடை சொல்லும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருக்கிறது. ஏனென்றால் சனாதனமும், விஸ்வகர்மா யோஜனாவும் வெவ்வேறு அல்ல.
எச்.ஐ.வி, தொழுநோய்: எனக்கு என்ன விந்தையாக இருக்கிறதென்றால், உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் சொன்னார். சனாதனத்தை மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். மலேரியாவையும், டெங்குவையும் சமூகம் அருவருப்பாகப் பார்க்காது. அருவருப்பாகப் பார்க்கும்படி சனாதனத்தைச் சொல்லவேண்டும் என்றால் ஒருகாலத்தில் தொழுநோய் இருந்தது. பிறகு எச்.ஐ.வி இருந்தது. சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும்.
சனாதன தர்மத்தைக் கடைபிடியுங்கள் என பிரதமர் சொல்கிறார். அவர் கடைபிடித்திருந்தால் இத்தனை வெளிநாடுகளுக்குப் போயிருக்கக் கூடாது. ஒரு நல்ல இந்து கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு ஊர் சுற்றுவதே வேலை. சனாதன தர்மத்தை மீறி ஊர் சுற்றும் ஒரு ஆள், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
நேற்று (நேற்று முன்தினம்) நான் பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் சவால் விட்டேன். சனாதனம் பற்றி விவாதம் நடத்துங்கள். எங்கள் தலைவரின் அனுமதியோடு சொல்கிறேன். 10 லட்சம் பேரை, 1 கோடி பேரை டெல்லியில் திரட்டுங்கள். உங்கள் அத்தனை சங்கராச்சாரியார்களையும் மேடையில் உட்கார வையுங்கள். உங்கள் எல்லா ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். வில், அம்பு, கத்தி, கொடுவாள் எல்லாவற்றையும் நிற்க வையுங்கள். நான் வெறும் பெரியார், அம்பேத்கர் புத்தகங்களோடு வருகிறேன். என்னை ஜெயித்துப் பார். நீங்கள் எல்லாம் மகா விஷ்வ குரு. உங்கள் பார்வையில் சாதாரண பஞ்சம சூத்திரன்.
உதயநிதி ஸ்டாலின் பேசியது மென்மையான பேச்சு. என்னைக் கேட்டால் இன்னும் கடுமையாகப் பேசுவேன். சனாதனத்திற்கு எதிரான எங்கள் கருத்தை எதிர்த்துப் பேசுவதற்கு உங்கள் தரப்பில் யாராவது ஆள் இருந்தால் டெல்லியில் எங்கு வேண்டுமானாலும் நாள் குறியுங்கள். ஆ.ராசா வருவதற்குத் தயாராக இருக்கிறேன்." என்று ஆ ராசா சவால் விட்டார்.
சென்னையில் ஆ ராசா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது.பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் சனாதன தர்மம் குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுக எம்பி ஆ ராசா மீது டெல்லி வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். சனாதனத்தை தொழுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications