வெந்த புண்ணில் வேல்... இலங்கை- இந்திய கடற்படை கூட்டு பயிற்சிக்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு!
டெல்லி: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டனம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து இன்று முதல் கூட்டு பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். தங்களைத் தொடர்ந்து தாக்கி சிறை பிடித்து வரும் இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; இத்தகைய கூட்டு பயிற்சியை உடனே கைவிட வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி இன்று முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த பயிற்சியின் துறைமுக கட்டப் பயிற்சி டிசம்பர் 17-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரையிலும், கடல் மார்க்கப் பயிற்சி டிசம்பர் 19-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLINEX எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு கடற்படை பயிற்சிகளாகும்.
இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுர ஆகியவை சிறப்பு படை குழுக்களுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
டிசம்பர் 19-ந் தேதி தொடங்கும் கடல் மார்க்கப் பயிற்சியில், சிறப்புப் படை நடவடிக்கைகள், துப்பாக்கிச்சுடுதல், தகவல் தொடர்பு பயிற்சிகள், கடல்சார் நடைமுறைகள் உள்ளிட்ட கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும்.
இதனிடையே இந்த கூட்டுப் பயிற்சிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் தங்களைத் தாக்கி கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற இந்த கூட்டு பயிற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக டெல்லிக்கு வருகை தந்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் விரிவாகப் பேசினோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்பட்டோம். இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அனைவரையும் உள்ளடக்கிய தனது கண்ணோட்டத்தை அதிபர் திசநாயக எனக்கு விளக்கினார். தமிழ் மக்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதேபோல இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பேசுகையில், அண்மையில் நடைபெற்ற மீன்பிடி தொடர்பான ஆறாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில், மீன்பிடி பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதில் கூட்டு அணுகுமுறையின் அவசியத்தையும் நாங்கள் ஆராய்ந்தோம். இரு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட முறையில் மீன்பிடிப்பதினால் ஏற்படும் சீர்செய்ய முடியாத சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்து, அந்த நடைமுறையை நிறுத்தவும், சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் கண்காணிக்கப்படாத மீன்பிடித்தத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications