தமிழ்நாட்டிற்கு விரைவில் புதிய ஆளுநர்? பரபர சூழலில் நடந்த பிரதமர் மோடி - ஆளுநர் சந்திப்பு
டெல்லி: தமிழ்நாட்டின் ஆளுநர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை இன்று நேரில் சந்தித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 7ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து எல் முருகன் உள்ளிட்ட 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அதற்கு முன்பு தான் கர்நாடகா உள்ளிட்ட எட்டு மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பா.ஜ.க தலைவர்களை குறிவைக்கும் விவசாயிகள்..பா.ஜ.க.வின் 2 கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு.. ரத்து!
டெல்லியில் பன்வாரிலால் புரோகித்
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றிரவு டெல்லி சென்றார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்வது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், இன்று மதியம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசினார். இதில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிரதமர் மோடி உடனான சந்திப்பிற்குப் பிறகு டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திரும்பினார்.
புதிய ஆளுநர்
மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது பல மூத்த அமைச்சர்கள் பதவி விலகினர். அதில் முக்கியமானவர் ஐடி துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத். அவர் ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவல் பலருக்கும் முதலில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விரைவில் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
முக்கிய சந்திப்பு
இந்த சூழ்நிலையில் நடந்துள்ள பிரதமர் மோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிரதமர் மோடி உடனான ஆளுநரின் சந்திப்பு திடீர் சந்திப்பு இல்லை என்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று தான் என்றும் கூறப்படுகிறது.