பீதியில் அதிமுக - மேலும் 2 மாஜி அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் தருகிறார்?
டெல்லி: அண்ணா திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் மீதான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கோரும் கோப்புகள், சிறை கைதிகள் விடுதலை கோப்புகள் உள்ளிட்டவை எப்போது ஆளுநர் மாளிகைக்கு வந்தது? ஆளுநர் தரப்பில் எப்போது ஒப்புதல் தரப்பட்டது என விரிவான பதில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்களையும் கோப்புகளையும் ஒப்புதல் தராமல் நீண்டகாலம் நிலுவையில் வைத்திருக்கிறார் என்பது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு. இந்த வழக்கில் ஆளுநர் செயலாளர் பதிலளிக்க கடந்த 10-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் விரிவான பதில் தரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
- 2020ம் ஆண்டு முதல் மொத்தம் 181 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 152 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 5 மசோதாக்களை அரசு திரும்பப் பெற்றுவிட்டது. 9 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை. 5 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளன.
- அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியை விசாரிக்க அனுமதி கோரும் கோப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி கிடைத்தது. இந்த கோப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசிடம் விசாரணை அறிக்கை ஜூலை 7-ந் தேதி கேட்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை ஜூலை 13-ல் கிடைத்தது. ஆனால் விசாரணை அறிக்கை கோப்பு அதிகாரப்பூர்வமாக இல்லை என்பதால் கடந்த 15-ந் தேதி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசிடம் இருந்து கடந்த 18-ந் தேதி கோப்பு கிடைத்துள்ளது.
- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிவி ரமணா, விஜயபாஸ்கர் இருவரையும் விசாரிக்க அனுமதி கோரும் கோப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி கிடைத்தது. இதற்கான ஒப்புதல் கடந்த 13-ந் தேதி வழங்கப்பட்டது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை விசாரிப்பதற்கான கோப்பு கடந்த மே 15-ந் தேதி கிடைத்தது. இது தற்போது பரிசீலனையில் உள்ளது.
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கர் மீதான விசாரணைக்கு அனுமதி கோரும் கோப்பு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி கிடைத்தது. இதற்கான ஒப்புதல் கடந்த 18-ந் தேதி வழங்கப்பட்டது.
- 580 கைதிகளை விடுதலை செய்வதற்கான முன்மொழிவில் 362 பேரை விடுதலை செய்ய ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 165 பேரின் முன்விடுதலை முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுவிட்டது. 53 பேரின் முன்விடுதலை முன்மொழிவு நிலுவையில் உள்ளது.
- கைதிகள் முன்மொழிவு கோப்புகள் கடந்த ஜூன் 20, ஆகஸ்ட் 4, 9, 24 ஆகிய தேதிகளில் கிடைக்கப்பெற்றன.
இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications