முல்லை பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி! தமிழகம் vs கேரளா என்னதான் பிரச்சனை?
டெல்லி: தமிழகம் கேரளா இடையேயான முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதியின் கீழ் ஒன்றிணைக்கவும் பரிந்துரைத்திருக்கிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

பிரச்சனை என்ன?:
இந்த அணை கடந்த 1895ம் ஆண்டு இடுக்கியில் கட்டப்பட்டது. இடுக்கி அந்த காலத்தில் திருவிதாங்கூர் அரசாங்கத்தின் கீழ் இருந்தது. ஆனால் அணையை கட்டியது மெட்ராஸ் மாகாணத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள். எனவே பராமரிப்பு உரிமை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. 176 அடி உயரமுள்ள இந்த அணையில் 152 அடி வரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது.
இப்படி செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் முல்லை பெரியாறு அணையின் தண்ணீரை நம்பியுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், மக்களுக்கும் மிகுந்த பலன் அளிக்கும்.
ஆனால், 125 ஆண்டு பழைய அணையில் இவ்வளவு நீர் தேக்கினால் அணை உடைய வாய்ப்பு இருப்பதாக கேரளா வாதிடுகிறது. அப்படி அணை உடைந்தால் இடுக்கி மட்டுமல்லாது கேரளாவில் 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். எனவே, 136 அடி வரை மட்டும் தண்ணீரை தேக்கிக்கொள்ள வேண்டும் அல்லது புதிய அணையை கட்ட வேண்டும் என்பது கேரளாவில் நிலைப்பாடாக உள்ளது.
புதிய அணையை கட்டினால், அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை இழக்க நேரிடும் என்பதால் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நீதிமன்ற உத்தரவு என்ன?:
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கேரளா குறுக்கீடாக இருப்பதாக தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா இடையூறாக இருப்பதாக வழக்கில் தமிழகம் குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையைடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், "முல்லைப்பெரியாறு விவகாரத்தில் புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இரு மாநிலங்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். உரிய தீர்வு காண இயலாவிட்டால் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்வு காணும்.
ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும். அதிலிருந்து இரண்டு வாரத்திற்குள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இன்றிலிருந்து நான்காவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நான்கு வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகமும் கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல உள்ளது. முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கேரளா மேற்கொள்ள விடுவதில்லை, மரத்தை வெட்டவிடுவதில்லை என்று தமிழகமும் கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது பள்ளிக் குழந்தைகள் சண்டை போடுவது போல உள்ளது.
இது போன்ற விவரங்களில் உண்மையில் நீதித்துறை தலையீடு தேவையா என்று நாங்கள் நினைக்கிறோம். மேற்பார்வை குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மேற்பார்வை குழு உடனடியாக கூடி முடிவெடுக்க உத்தரவிடுவோம் அல்லது அவர்கள் அறிக்கை தாக்கல் செய்து நாங்கள் ஒரு உத்தரவை பிறப்பிப்போம்" என்று கூறியுள்ளனர்.
மேலும், "தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால், கேரளா பேரழிவை சந்திக்க வேண்டும் என்கிற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த அணை தொடர்பான வழக்குகள் சிதறி கிடக்கின்றன. எனவே மொத்த வழக்கையும் ஒன்றிணைத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கிறோம்" என தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications