வட மாநில தொழிலாளர் விவகாரம்.. கைது வேண்டாம்.. இணைய எடிட்டர் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: போலி செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஒப்இந்தியா எடிட்டர் மற்றும் சி இ ஒவிற்கு எதிராக 4 வாரங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டதாக போலி வீடியோக்கள் கடந்த மார்ச் மாத துவக்கத்தில் பரவியது.
இது தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் பரவிய போலி வீடியோக்களை வைத்து பல முன்னணி வட இந்திய சேனல்களும் செய்திகளாக ஒளிபரப்பின. பீகார் சட்டமன்றம் வரை தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய தகவல் எதிரொலித்தது. இதையடுத்து, பீகாரில் உள்ள அதிகாரிகள் குழு தமிழகம் வருகை தந்து வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தது.
தமிழக காவல்துறையும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரப்பிய சில இந்தி பத்திரிக்கை செய்தி ஆசிரியர்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் பிரபல இணையதள செய்தி நிறுவனமான ஓப் இந்தியாவின் எடிட்டர் மற்றும் சி இ ஓவிற்கு எதிராகவும் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஓப் இந்தியா எடிட்டர் மற்றும் சிஇஓ ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும், வரும் 4 வாரங்களுக்கு கடுமையான நடவடிக்கை எதுவும் இவர்களுக்கு எதிராக எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications