தொகுதி மறுவரையறை: தமிழ்நாட்டுக்கு +9 இடங்கள் தான்.. உ.பிக்கு +53 தொகுதிகள் கிடைக்கும்! திருச்சி சிவா
டெல்லி: தொகுதி மறு சீரமைப்பு மசோதா தென் மாநிலங்களுக்கு தான் பெரிய பாதிப்பு.. உத்தர பிரதேசத்தில் 6 கோடி பேர் இருந்தாங்க, இப்போது 20 கோடி பேர் இருக்கிறார்கள். இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 9 இடங்கள் மட்டுமே அதிகரிக்கும் ஆனால் உத்தரபிரதேசத்திற்கு 53 தொகுதிகள் அதிகரிக்கும் என்று திர்ச்சி சிவா எம்பி கூறினார்.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூட்டப்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் இரண்டு முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்தார். பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யப்போகும் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தொகுதிகளை எப்படி மாற்றி அமைப்பது என்பது குறித்த மசோதா என இரண்டையும் தாக்கல் செய்தார்.

திருச்சி சிவா பேச்சு
எதிர்க்கட்சிகள் சார்பில் பேசிய எம்பிக்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தாலும் கூட தொகுதி மறுசீரமைப்பை மிகக் கடுமையாக எதிர்த்தனர். திருச்சி சிவா எம்பியும் தொகுதி மறு சீரமைப்பு மசோதா தென் மாநிலங்களுக்கு பெரிய பாதிப்பு என்றும், தமிழகத்திற்கு 9 இடங்கள் மட்டுமே அதிகரிக்கும் ஆனால் உத்தரபிரதேசத்திற்கு 53 தொகுதிகள் அதிகரிக்கும் என்றும் கூறினார். திருச்சி சிவா பேசியதாவது:-
தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வடக்கே உள்ள சிறு மாநிலங்கள் பெரிதாக பாதிக்கப்படும். 543 என்ற உறுப்பினர்கள் 850 என்று மாறுகின்ற போது, 2011 மக்கள் தொகை அடிப்படையில் என்று சொல்கிறார்கள். இதில் தமிழ்நாடை எடுத்துக் கொண்டால் 1971 ஆம் ஆண்டில் தான் நிற்கிறது.
9 தொகுதிகள் தான் அதிகமாகும்
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பல பேரின் எதிர்ப்பின் காரணமாக மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுடன் இருப்பதால் அதை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி 1976 ஆம் ஆண்டு 25 ஆண்டுகள் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் வாஜ்பாய் அரசு அமைந்தபோதும் 2001 ஆம் ஆண்டு மேலும் 25 ஆண்டுகள் தள்ளி வைக்கப்பட்டது. இப்போதும் திமுக இந்த கோரிக்கையினை வலியுறுத்துகிறது. எதற்காக என்னவென்றால், வடக்கே இருக்கும் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றாததால் மக்கள் தொகை தாறுமாறாக எகிறி இருக்கிறது.
உதாரணத்திற்கு உத்தர பிரதேசத்தில் 6 கோடி பேர் இருந்தாங்க, இப்போது 20 கோடி பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் அன்று 4 கோடி என்று இருந்த நிலையில் இன்று 7 கோடி பேர் தான். இப்போது இவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கு எடுக்கும் போது அதுவும் 2011 என்ற இதை பார்த்தோம் என்றால் தமிழ்நாட்டில் 39 இடங்கள் என்பது 48 இடங்களாகத்தான் மாறும். இதே உத்தரபிரதேசத்தை எடுத்துக்கொண்டால் 80 என்று உள்ள இடம் 132 ஆக அதிகரிக்கும்.
தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக
வடக்கே எக்கச்சக்கமாக கூடும் போது, நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரல் எடுபடாமல் போய்விடும். எந்த ஒரு சட்டத்திலும் நம் குரல் ஒலிக்காது. தமிழகம் மற்றும் வங்கதேசத்தில் தேர்தல் நடக்கின்ற போது அவசர கதியில் இந்த அரசு நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் 140 எம்பிக்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட விடாமல் டெல்லியில் முடக்கி வைத்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதவை எதற்காக இதில் சேர்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. நாங்கள் மகளிர் இடஒதுக்கீடுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.
என்னவெல்லாம் அரசியல் சட்டத்தில் பாதுகாப்பு இருந்ததோ அது எல்லாம் நீக்குகிறார்கள். அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதால் இது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்க வேண்டும், ஒப்புதல் வேண்டும். ஆனால் அதுவும் இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தையாவது கூட்டுங்கள் என்றால் அதுவும் செய்யவில்லை. மக்கள் தான் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால் எங்களிடம் எதுவும் கேட்பது இல்லை.














Click it and Unblock the Notifications