தமிழக அரசியல் கிளைமேட்.. பாஜக வளர்வது ஈசி! சொல்கிறார் சிடி.ரவி -அதிமுக பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் சி.டி.ரவி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் பொருப்பாளராக இருந்து கட்சியின் உள் விவகாரங்களின் பல்வேறு முடிவுகளை எடுத்து வரும் சி.டி.ரவி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல் பாஜக வளர்வதற்கு உகந்ததாக இருக்கிறது.

நல்ல உறவை தொடர்வோம்
நாங்கள் அதிமுகவுடன் அரசியல் கூட்டணி வைத்து இருக்கிறோம். தற்போது அக்கட்சியில் நடந்து வருவது உள்கட்சி விவகாரம். ஒரு நிறுவனத்துடன் நாங்கள் உறவை வைத்து இருக்கிறோம். அதிமுகவில் யார் தலைமை தாங்கினாலும் நாங்கள் நல்ல உறவை தொடர்வோம். கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருவது மக்களுக்கு தெரியும்.

திராவிடத்தை உள்ளடக்கிய இந்துத்துவம்
ஆனால் இன்று பாஜக திராவிட கலாச்சாரம், தேசியவாதம், தமிழ் பெருமை, மக்கள் நலத்திட்டங்கள், மாநிலத்தின் அத்தியாவசிய தேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்துத்துவத்தை கொண்டு வருகிறது. கம்பராமாயனம், திருக்குறள், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பாரதியார் ஆகியோர் இல்லாமல் திராவிடம் முழுமை பெறாது. சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் கட்டிய கோயில்கள் அனைத்தும் திராவிட வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அங்கம்.

அண்ணாமலைக்கு பாராட்டு
சோழ மன்னர்கள் சனாதன தர்மத்தை காப்பாற்றுவதற்காக இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் பிற நாடுகளுக்கும் படையெடுத்தனர். பிறகு எப்படி திராவிடத்தை இந்துத்துவத்துக்கு எதிரானதாக காட்ட முடியும். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் பணிகள் தமிழ்நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. தேர்தல்களில் நல்ல முடிவுகளை பெற, கட்சியை வலுவாக கட்டமைத்திடவும் அனைத்து பகுதிகளிலும் பூத் ஏஜெண்டுகள், கட்சித் தொண்டர்கள், தலைவர்களை செயல்படக்கூடியவர்களாக மாற்றவும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டுக்கு சிறப்பு கவனம்
அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக வலுவான கட்சியாகவும் மாற்று சக்தியாகவும் உருவெடுக்கும். தமிழ்நாடு மற்றும் அதன் கலாச்சாரம் பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுகிறது. இங்கு இந்துத்துவத்தை யாராலும் தடுக்க முடியாது. திமுக திராவிடத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications