“சதுரங்கம்”.. முதல்முறை சந்திப்பு - திரௌபதி முர்முவிடம் ஸ்டாலின் கொடுத்த கிப்ட்! அடடே இதுவா?
டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைநகர் டெல்லிக்கு சென்றடைந்தார். அங்கு கலைஞர் இல்லத்தில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் புதிய குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்ற ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடியை எதற்காக நேரில் சந்திக்கிறேன் தெரியுமா? காரணத்தை விளக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
திரௌபதி முர்முவுடன் சந்திப்பு
அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
புத்தகம் மற்றும் பரிசுப்பொருள்
அப்போது குடியரசுத் தலைவரிடம் சால்வை வழங்கிய மு.க.ஸ்டாலின், "HOME OF CHESS" என்ற புத்தகத்தையும் வழங்கினார். தமிழ்நாட்டின் மரபு அரிசிகள், 10 வகையான அருந்தாணியங்களை கொண்ட பரிசுப் பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரௌபதி முர்முவிடம் வழங்கினார். ஸ்டாலின் - திரௌபதி முர்மு இடையிலான பேச்சுவார்த்தை 20 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது.
குடியரசுத் தலைவர் தேர்தல்
நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் கடந்த ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், பாஜக சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.
குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு
ஜூலை 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து 25 ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.