அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி உத்தரவு!
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். வழக்கு விசாரணை நடைபெறுவதால் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றிய ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரிய அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications