தமிழக அரசு மனுவில் பிழை.. டாஸ்மாக் மூடலுக்கு எதிரான மனுவை ஏற்காத உச்சநீதிமன்றம்.. நாளைதான் விசாரணை
டெல்லி: டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவில்லை. எனவே, குடிமகன்கள் கடை திறக்குமா, திறக்காதா என்ற எதிர்பார்ப்போடு காத்துக்கிடக்கிறார்கள்.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருந்ததால் அதனை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேல்முறையீட்டு மனுவில் இருக்கும் பிழை சரிசெய்யப்பட்ட நிலையில், நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று மாலை அறிவித்துள்ளது.

7ம் தேதி திறப்பு
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 7ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்தனா். ஆனால், டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

ஆதார் எண்
அதேநேரம், பல நிபந்தனைகளை அரசுக்கு விதித்தது. மதுபான விற்பனையின்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், மது வாங்கும் நபா்களுக்கு ரசீது வழங்கும்போது, மது வாங்குபவரின் பெயா், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அதில் இடம் பெற்றன.

கூட்டம்
இதையடுத்து, சென்னை காவல் எல்லை தவிர்த்த பிற பகுதிகளில், ஜரூராக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் குடிமகன்கள் மொத்தமாக குவிந்து, சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர். டாஸ்மாக் மது விற்பனை தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட எந்த நிபந்தனைகளையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறி, மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் அந்த கட்சியின் ஏ.ஜி.மௌரியா வழக்குத் தொடா்ந்திருந்தாா். இதே போல, டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரி வழக்கறிஞா் ஜி.ராஜேஷ் உள்ளிட்டோா் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.

மேல்முறையீடு
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், புகாரில் ஆதாரம் இருப்பதாக கூறி, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. எனவே, நேற்று மற்றும் நேற்று முன்தினம், டாஸ்மாக் கடைகளை திறக்க முடியவில்லை. உடனே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு. சனிக்கிழமை தாக்கல் செய்த அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கடை திறக்க உத்தரவு வந்தால், நாளையே, கியூவில் நிற்க, குடிமகன்கள் பணத்தை சேர்த்துக் கொண்டு, ரெடியாக நின்றனர். ஆனால், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

பிழை
தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால், இன்று விசாரணைக்கு வரவில்லையாம். ஆனால் என்ன பிழை என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. அநேகமாக நாளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு நாள் தாமதத்தின்போதும், அரசுக்கு பெருமளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications