பல மாதங்களுக்கு பிறகு.. டிசிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஸ்டன் ஆன டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஊழியர்கள்
டெல்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஐந்து மாத தாமதத்திற்குப் பிறகு, தனது ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு சராசரியாக 4.5-7% ஆண்டு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டு (மார்ச் 2025-ல் முடிவடைந்தது) முதல் இந்த ஊதிய உயர்வுகள் பொருந்தும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது. சிறப்பான பங்களிப்பாளர்கள் 10% க்கும் மேல் ஊதிய உயர்வு பெறுவார்கள் என தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஊதிய உயர்விலேயே இது மிகவும் குறைவானது என கருதப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையிலும், டிசிஎஸ் நிறுவனத்திலும் நிலவும் மந்தநிலை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 2024 நிதியாண்டில் சராசரி உயர்வு 4.5-7% ஆக இருந்தது. 2023 நிதியாண்டில் இது 6-9% ஆகவும், 2022 நிதியாண்டில் 10.5% ஆகவும் இருந்தது. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் இந்த உயர்வுகள் அமல்படுத்தப்படும்.
புதிய ஊதிய உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது இளநிலை ஊழியர்கள் முதல் C3A தரம் வரையிலானவர்களுக்கு பொருந்தும். உயர்நிலை ஊழியர்கள் (C3B, C4, C5) இந்த உயர்வு வரம்புக்குள் வரவில்லை.
டிசிஎஸ் ஹைக்
இந்த உயர்வுகள் அரியர் உடன் செலுத்தப்படாது. செப்டம்பர் மாத ஊதியத்துடன் இது வழங்கப்படும் என்று டிசிஎஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம், டிசிஎஸ் தனது 80% ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கும் என்று செய்தி வெளியிட்டது. ஆகஸ்ட் 6 அன்று டிசிஎஸ் மனிதவளப் பிரிவின் தலைவர் மிலிந்த் லக்கட் மற்றும் துணைத் தலைவர் கே. சுதீப் அனுப்பிய மின்னஞ்சலில், "C3A மற்றும் அதற்கு இணையான தகுதியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய திருத்தம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்கள் பணியாளர்களில் 80% பேரை உள்ளடக்கியது. இது செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசிஎஸ்ஸின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை
இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, நிறுவனம் தனது 6 லட்சம் பணியாளர்களில் சுமார் 2% (12,000 க்கும் மேற்பட்டோர்) மத்திய மற்றும் மூத்த நிலை ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நேரத்தில் வந்துள்ளது. ஜூன் மாத இறுதி நிலவரப்படி, டிசிஎஸ்ஸின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 6,13,069 ஆக இருந்தது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைவான வருவாய் வளர்ச்சி, வாடிக்கையாளர்களின் முடிவெடுப்பதில் தாமதம், கட்டணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மாற்றங்கள் குறித்த கவலைகளை எதிர்கொள்ளும் நிலையில், இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் ஜூன் மாதம் ஒரு புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒரு ஊழியர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 35 நாட்கள் திட்டம் ஒதுக்கீடு இல்லாமல் இருக்க முடியும். மேலும், ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 225 வணிக நாட்கள் திட்ட வேலை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட டிசிஎஸ், மத்திய மற்றும் மூத்த நிலை ஊழியர்களை புதியதாக பணியமர்த்துவதை நிறுத்திவிட்டது என தெரிவித்துள்ளது. சென்னை, ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 600 புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காகவும் நிறுவனம் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த பணியாளர் தொடர்பான நிகழ்வுகள் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் கர்நாடக தொழிலாளர் துறை டிசிஎஸ் மீது விசாரணை நடத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications