ஆசிரியர் தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து! ஜனாதிபதி மாளிகை அமிர்த தோட்டம் பார்வையிட அனுமதி!
டெல்லி: ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5 முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்) முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தை இலவசமாக பார்வையிடவும் இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி பிறந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை சிறப்பிக்க அன்றைய தினம் ஆசிரியர் தினம் என கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் சிறந்த கல்வியாளரும், தத்துவவாதியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது. அவர் நாட்டிற்கும் உத்வேகம் அளிக்கும் சிறந்த ஆதாரமாக திகழ்கிறார். இந்தத் தருணத்தில் அவருக்கு எனது பணிவான மரியாதையைக் காணிக்கையாக்குகிறேன்.
குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம். மாணவர்களாக அவர்கள் வாழ்க்கைத் திறன்களையும் மதிப்புகளையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள், வழிகாட்டிகளாகத் திகழ்ந்து, நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எதிர்கால தலைவர்களாக மாணவர்களை வடிவமைக்க முடியும்.
வருங்கால சந்ததியினரின் மனதை ஊக்குவித்து, அவர்களை ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் முக்கிய பணி ஆசிரியர்களிடம் உள்ளது. தார்மீக மதிப்புகள், சிந்தனைத் திறன், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கல்வியை வழங்குவதற்கான நவீன முறைகளைத் தொழில்நுட்பத்தின் உகந்த பயன்பாடு மூலம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் மாணவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் அவர்களது வாழ்க்கையை உருவாக்கவும், வளர்ந்த தேசத்தை கட்டமைக்கவும் அதிகாரம் அளிக்க முடியும்.
நான் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தினருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ஜனாதிபதி மாளிகை அமிர்தத் தோட்டம்: டெல்லி ஜனாதிபதி மாளிகையின் அமிர்தத் தோட்டத்தில் இன்று ஆசிரியர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள், வடக்கு அவென்யூ சாலைக்கு அருகிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் 35-வது நுழைவு வாயிலில் இருந்து செல்லலாம். மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து 35-ம் எண் நுழைவு வாயில் வரை இலவச பேருந்து சேவையும் அவர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்படும்.
அம்ரித் உத்யன் எனப்படும் அமிர்தத் தோட்டத்தைப் பார்வையிட கோடைகால அனுமதியாக, இந்த ஆண்டில் 2024 ஆகஸ்ட் 16 முதல் 2024 செப்டம்பர் 15 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இது பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
இதைப் பார்வையிட அனுமதி இலவசம். பார்வையாளர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் இணையதளமான https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற தளத்தின் மூலம் அமிர்தத் தோட்டத்தைப் பார்வையிட முன்பதிவு செய்யலாம். நுழைவு வாயில் எண் 35-க்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சுய சேவை மையங்கள் மூலமாகவும் பார்வையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு கோடைகால அனுமதியின்போது தற்போதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமிர்தத் தோட்டத்தைப் பார்வையிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications