2024இல் பாஜக இல்லாத ஆட்சி அமைந்தால்.. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்! கேசிஆர் சரவெடி
டெல்லி: பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
நாட்டில் அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டில் தான் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் போதிலும், இப்போத அது குறித்த பேச்சுகள் எழுந்துவிட்டன.
நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரே அணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்காகப் பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

சந்திரசேகர ராவ்
பீகார் முதல்வரும் சமீபத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டவருமான நிதிஷ்குமார் இதற்காக டெல்லி சென்று முக்கிய தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இருப்பினும், அவருக்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டவர் சந்திரசேகர ராவ். நேற்று நிஜாமாபாத்தில் பேசிய சந்திரசேகர ராவ் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

விவசாயிகள்
மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத அரசு ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். நிஜாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "பாஜக அரசு விவசாய வயல்களில் மின் மீட்டர் பொருத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பதில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் பாஜக அரசுக்கு மக்கள் மீட்டர் போட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

பாஜக
மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாத பாஜகவை நாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பாஜக இல்லாத தேசத்தை நாம் உருவாக்க வேண்டும். விவசாயிகளிடம் பயிர்களை வாங்காமல். அவர்களுக்கு மின்சாரம் வழங்காமல். விவசாய நிலங்களைக் கைப்பற்ற பாஜக அரசு சதி செய்கிறது. விவசாயிகளுக்கு அதிக மின் கட்டணச் சுமை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு இறங்கி உள்ளது.

கடன்
விவசாயம் செய்வதையே கடினமான வேலையாக மாற்றும் நடவடிக்கையில் பாஜக இறங்கி உள்ளது. வராக்கடன் என்ற பெயரில் பாஜக அரசு பெரிய கார்பரேட் நிறுவனங்களின் 12 லட்சம் கோடி மதிப்புடைய கடன்களைத் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைத் தர மறுக்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கு வெறும் 1.45 லட்சம் கோடி மட்டுமே செலவாகும்

இலவச மின்சாரம்
2024 தேர்தலுக்குப் பிறகு நாட்டில் பாஜக அல்லாத ஆட்சி கண்டிப்பாக அமையும்.. இந்த மாற்றத்தை விவசாயிகள் முன்னெடுப்பார்கள் என நான் தீர்க்கமாக நம்புகிறேன். அப்படி பாஜக இல்லாத ஆட்சி அமைந்தால் நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். தலித்துகள், நலிந்த பிரிவினர், பெண்கள் என யாருக்கும் பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் [மாநில] அரசுகளைக் கவிழ்ப்பது மட்டும் பாஜகவின் வேலையா?

தேசிய அளவில்
நாட்டின் நலனைக் காக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்களும் என்னை அழைக்கிறார்கள். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். தெலுங்கானாவைப் போல நாம இந்த நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவோம். பாஜக மத வெறியையும் வெறுப்பையும் வளர்க்கிறது... பாஜக உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. அதில் யாருக்கும் எந்தவித மாற்றுக்கருத்தும் இக்காது என்றே நம்புகிறேன்" என்று மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications