அதானியின் ரூ.100 கோடி நிதியை மறுத்த தெலுங்கானா.. முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு! பின்னணி என்ன?
டெல்லி: அதானி மீது அமெரிக்க அதிகாரிகள் லஞ்ச புகாரை முன்வைத்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.. இதற்கிடையே தெலுங்கானாவில் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகம் அமைக்க அதானி குழுமம் ரூ. 100 கோடி ரூபாய் நிதி அளிக்க முன்வந்து இருந்த நிலையில், அந்த நிதியை ஏற்கப் போவதில்லை என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
அதானி குழுமத்தினர் மீது அமெரிக்க அரசு அதிகாரிகள் கடந்த வாரம் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதாவது சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புடன் தங்களின் ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ள அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக புகார் கூறப்பட்டது.

அதானி லஞ்ச விவகாரம்: இது தொடர்பாக மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாநில மின்வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்துள்ளது என்பதே புகாராகும்.. மொத்தம் ரூ. 2000 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் குறிப்பாக ஆந்திரப் பிரதேச மின்துறையில் பணியாற்றிய அதிகாரிக்கு மட்டும் ரூ. 1750 கோடி லஞ்சம் தரப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.. இதற்காக அதானியே நேரில் சிலரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரே ஆந்திரப் பிரதேச அரசு சுமார் 7 ஜிகாவாட் சூரிய சக்தியை வாங்க ஒப்புக்கொண்டது.
இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதானி லஞ்ச விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே அதானி குழுமத்திடம் இருந்து ரூ.100 கோடி நிதியைத் தெலுங்கானா அரசு நிராகரித்துள்ளது.
தெலங்கானா அரசு: அதாவது இளைஞர்களிடையே திறன்களை மேம்படுத்தும் நோக்கில் திறன் பல்கலைக்கழகம் (skills university) அமைக்கத் தெலுங்கானா அரசு முடிவு செய்தது. இதற்கு அதானி குழுமம் ரூ.100 கோடி நிதி தர முன்வந்த நிலையில், அதைத் தெலுங்கானா அரசு நிராகரித்துள்ளது. தெலுங்கானாவில் அமையும் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் உட்பட எந்தவொரு அமைப்பிடமிருந்தும் தனது அரசு நிதியோ நன்கொடையோ பெறவில்லை என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார்.
ரேவந்த் ரெட்டி: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி உட்பட எந்த அமைப்பிடமிருந்தும் தெலுங்கானா அரசு நிதியோ, நன்கொடையோ பெறவில்லை. அதேநேரம் திறன் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.100 கோடி நிதி தருவதாக அதானி அரசு உறுதியளித்திருந்த நிலையில், அதை நாங்கள் ஏற்கப் போவதில்லை. இது தொடர்பாக அதானி குழுமத்துக்கு நேற்று எழுதி இருக்கிறோம்.
ராகுல் காந்தி: மத்திய அரசாக இருந்தாலும் சரி எந்தவொரு மாநில அரசாக இருந்தாலும் சரி முறையாக டெண்டர் கோர வேண்டும் என்று ராகுல் காந்தி தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, ஜனநாயக வழியில் முறையான செயல்முறையை நாங்கள் பின்பற்றுவோம்.. டெண்டர்கள் விடப்பட்டே அதானி, அம்பானி அல்லது டாடா என யாராக இருந்தாலும் பணிகளை ஒதுக்குவோம்.
யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு பல நிறுவனங்கள் நிதி அளிக்க முன்வந்து வாக்குறுதி கொடுத்தன. அதேபோலத் தான் அதானி குழுமமும் எங்களுக்கு ரூ.100 கோடி வழங்க முன்வந்தது. ஆனால், அதானி குழுமத்திடம் இருந்து ரூ.100 கோடியை ஏற்க மாட்டோம் என்ற எங்கள் முடிவைக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications