இப்பவே கண்ணை கட்டுதே.. இந்த வருடம் இந்தியாவில் வெயில் கொளுத்த போகிறதாம்.. ஆய்வாளர்கள் தந்த வார்னிங்
சமவெளி பகுதியில் வெப்பநிலை 40 டிகிரியை கடந்தால் அங்கு வெப்ப அலை வீசுகிறது என்று அர்த்தம்.
டெல்லி: வழக்கமாக ஏப்ரல் முதல் ஜூலை வரை வெப்ப அலைகள் வீசும் நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் தற்போதே வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிப்ரவரி என்பது குளிர்காலமாக இருக்கிறது. நாடு முழுவதும் இன்னும் பனி விலவில்லை. காலையில் குளிர் நீடித்து வருகிறது. பலரும் ஸ்வெட்டருடன்தான் வெளியில் செல்கிறார்கள். ஆனால், சில குறிப்பிட்ட இடங்களில் வெப்பநிலை சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கிறது. இதன் அர்த்தம் வெப்ப அலை தொடங்கிவிட்டது என்பதுதான். சமவெளி பகுதியில் வெப்பநிலை 40 டிகிரியை கடந்தால் அங்கு வெப்ப அலை வீசுகிறது என்று அர்த்தம்.
மலைப்பகுதியில் இதற்கான வரையறை 30 டிகிரி செல்சியஸாகவும், கடலோரப் பகுதியில் இது 37 டிகிரி செல்சியஸாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. சரியாக சொல்வதென்றால் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 5-11 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருக்கிறது.

வெப்பநிலை
அதே போல சில குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. ஆகவே இந்த பகுதிகளில் வெப்ப அலை வீச தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியாவை பொறுத்த அளவில் பிப்ரவரி மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும். கடந்த 1981ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை என 30 ஆண்டுகளாக இந்த வெப்பநிலைதான் பதிவாகி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு இயல்புக்கு மாறான வெப்பநிலை பாதிவாகியிருப்பது வெப்ப அலைகள் குறித்த கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம்
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மீண்டும் இது அதிகரிக்கும்" என்று தெரிவித்திருக்கிறது. எனவே கோடைக்காலம் குறித்த அச்சம் தற்போதே மேலெழ தொடங்கி இருக்கிறது. இவையனைத்தும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளாக ஆய்வாளர்களால் அடையாளம் காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானும் பல வானிலை சிக்கல்களை எதிர்கொண்டது. அதாவது எதிர்பாராத அளவில் திடீரென பெய்த மழை கடும் வெள்ளத்தை உருவாக்கி சுமார் 1,700 பேரை கொன்றது.

வெப்ப அலை
மட்டுமல்லாது சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்தன. 70 லட்சம் பேர் வெள்ளத்திலிருந்து தப்பிக்க புலம் பெயர்ந்தனர். இதனால் தற்போது அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பாகிஸ்தான் மட்டுமல்லாது பிரிட்டனும் காலநிலை மாற்றத்தால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. பிரிட்டன் ஒரு குளிர் பிரதேச நாடு, ஆனால் கடந்த ஆண்டு அங்கு பரவிய வெப்ப அலை மக்களை வறுத்தெடுத்து விட்டது. மக்கள் நீர்நிலைகளில் கூட்டம் கூட்டமாக படையெடுக்க தொடங்கிவிட்டனர். உயிரினங்கள் இந்த வெப்ப அலையை தாங்கிக்கொள்ள முடியாமல் பரிதவித்தன.

வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மேற்குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தற்போது அஞ்சப்படுகிறது. முன்னதாக உலக அளவில் காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியல் வெளியாகியிருந்தது. இதில் முதல் 50 இடங்களில் இந்தியாவின் 8 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications