பிராமணர்கள் பிடியில் கோவில்கள் இருப்பதை உடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பரபர வாதம்
டெல்லி: தமிழ்நாட்டு கோவில்கள் பிராமணர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உடைக்க வேண்டும் என சென்னை காளிகாம்பாள் கோவில் வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதத்தை முன்வைத்தது.
சென்னை காளிகாம்பாள் கோவில் நிர்வாக குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

பரவலாக்கமே சரி: இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கடவுள் நம்பிக்கை எனக்கும் உண்டு. ஆனால் ஒரு பிரிவினரே கோவில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சரி அல்ல. கோவிலுடைய நிர்வாகமும் வழிபாட்டு சுதந்திரமும் பரவலாக்கப்படுவதுதான் சரியானதாகவும் இருக்கும்.
பிராமணருக்கு மட்டும் உரியது அல்ல: கோவில்கள் என்பவை பிராமணர்களுக்கு மட்டுமே உரியதும் அல்ல. பிராமணர்கள் பிடியில்தான் கோவில்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். பிராமணர் அல்லாத பிற ஜாதியினர் பலரும் ஆகச் சிறந்த சமயம், மதம் சார்ந்த படைப்புகளை வழங்கி உள்ளனர். பிராமணர் அல்லாத வால்மீகிதான் ராமாயணம் படைத்தார். மீராபாய், துளசிதாசர், கபிலர் என பலரையும் இப்படி குறிப்பிட்டுச் சொல்லலாம். கோவில்கள் பொதுவானவை. ஒரே ஒரு ஜாதியின் பிடியில்தான் இருக்க வேண்டும் என்பதை உடைத்து எறிய வேண்டியதும் அவசியம் என வாதிட்டார்.
மோடியிடம் கேளுங்க: இந்த விசாரணையின் போது, தமிழ்நாட்டில் கோவில்களை அரசாங்கமே கைப்பற்றி வைத்திருக்கிறது என பிரதமர் மோடியே விமர்சித்திருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அப்படியானால் அந்த கருத்து பற்றி பிரதமர் மோடியிடம்தானே கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்து குட்டும் வைத்தனர்.












Click it and Unblock the Notifications