லோக்சபா தேர்தல்.. தீவிரமடையும் எதிர்பார்ப்புகள்! ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. மரபுப்படி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உறையாற்றியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஏராளமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத் தொடரின்போது இளைஞர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்மைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் பதாகைகளை ஏந்த அனுமதி இல்லை என்று கூறி அந்த எம்பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இப்படியாக மக்களவையில் 100 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. மறுபுறம் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இந்தியா கூட்டணி தலைவர்களை குறிவைப்பதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் போன்றவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
அதேபோல அசாமில் ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய யாத்திரைக்கு அம்மாநில அரசே இடையூறு ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில்தான் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. முன்னதாக இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில் காங்கிரஸ், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் அரசு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது.
இருப்பினும் அனைத்துக்கட்சி கூட்டம் சுமூகமாக முடிந்ததாக ஜோஷி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி தொடரை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
வேலைவாய்ப்பு, பெண்கள், வேளாண், எரிபொருள் விலை, வருமானவரி உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications