கலெக்டர் கந்தசாமி அதிரடி... திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவித்தது மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 24-ம் தேதி டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விருதினை பெற உள்ளார்.
இதற்கிடையே, நேற்று செங்கத்தை அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இருளில் தவித்த இருளர் இன மக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று உதவி செய்தார். இதனால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் 18 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.