பிஎஃப்ஐ மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு.. சமூக வலைத்தள கணக்குகளும் முடக்கம்.. என்ன நடந்தது?
டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனப்படும் பிஎப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அமைப்பின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எஸ்டிபிஐ தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தென் கடரோல மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவில் வலிமையாக செயல்பட்டு வந்திருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் தடை.. மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை
பெட்ரோல் குண்டு வீச்சு
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மத்திய புலனாய்வு அமைப்பு நாடு முழுவதும் பிஎஃப்ஐ/பிஎப்ஐ அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 300க்கும் அதிகமானோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தையும் அந்த அமைப்பினர் நடத்தினர். தமிழ்நாட்டில் இந்த ரெய்டு மற்றும் கைது சம்பவங்கள் நடந்ததையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
7 அமைப்புகளுக்கும் தடை
இது மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தீவிரப்படுத்தியது. இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பிஎப்ஐ நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மட்டுமல்லாது இந்த அமைப்புடன் தொடர்புடைய 7 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எம்எல்ஏவின் பேச்சு
இந்த தடை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கேரளாவை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ ஏகே முனீர் இந்த தடைக்கு வரவேற்பளிப்பதாக கூறியிருந்தார். மேலும், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு எதிராக மதசார்பற்ற முறையில் நாம் அனைவரும் போராட வேண்டும் என்றும் கூறியிருந்தார். "இந்த தடை ஒருதலைபட்சமானது" என அரசியல் கட்சிகள் பல கூறி வந்த நிலையில், முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ ஒருவர் இந்த தடையை வரவேற்கும் விதமாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
டிவிட்டர் கணக்கு முடக்கம்
இவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் தலைவர் ஜெயினுல் அபிதீன் அலி கானும் இந்த தடையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். தடை, நிர்வாகிகள் கைது, துணை அமைப்புகளுக்கும் தடை என மத்திய அரசு தனது பிடியை இறுக்கிய நிலையில் இதன் அடுத்தக்கட்டமாக பிஎப்ஐ-ன் சமூக வலைத்தள கணக்குகளையும் முடக்கியுள்ளது. பிஎப்ஐ அமைப்பின் டிவிட்டர் கணக்குகளை மத்திய அரசு தற்போது முடக்கியுள்ளது.