நெல் 7%, எள் 10.3%.. பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: விளை பொருட்களுக்கு நியாயமான அளவில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, மானாவாரி சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "2023-24ம் ஆண்டுக்கான சந்தைப்படுத்தல் பருவத்தில் மானாவாரி சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையிலும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலையின்படி நெல் குவிண்டாலுக்கு 143 ரூபாய் உயர்த்தி இனி 2,183 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.

அதேபோல, பாசிப்பயிறு குவிண்டால் ரூ.8,558, சோயா பீன்ஸ் ரூ.4,600, எள் ரூ.8,635, காட்டு எள் விதைகள் ரூ.7,734, பருத்தி ரூ.7,020 என்கிற அளவிலும் கொள்முதல் செய்யப்படும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பயிர் சேதங்களைக் குறைக்கவும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே உணவு பாதுகாப்பு துறை தொடர்பாக மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் முக்கியமானது உணவு தாணியங்கள் சேமிப்பு. இந்தியாவில் ஓராண்டில் ஏறத்தாழ 31 கோடி டன் அளவுக்கு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சேமிப்பு என்பது மிகவும் குறைவானதாக இருக்கிறது. அதாவது, 14.5 கோடி டன் அளவுக்குதான் நம்மிடம் சேமிப்பு திறன் இருக்கிறது. இது உற்பத்தியில் வெறும் 47 சதவிகிதம்தான். பல்வேறு வளர்ந்த நாடுகளில் இந்த சேமிப்பு திறனை அதிமாக கொண்டிருக்கும்.
எனவே இந்தியாவும் இதனை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கடந்த 31ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுத்திருந்தது. அதன்படி, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 7 கோடி டன் அளவிலான பிரமாண்ட சேமிப்பு கிடங்கை கட்டமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதாவது, முதல் கட்டமாக 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும். இப்படியாக வட்ட அளவில் 2,000 டன் சேமிப்பு திறன் கொண்ட கிடங்குகள் உருவாக்கப்படும்.
இதில் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு பிரமாண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இப்படி உருவாக்கப்படும் பிரமாண்ட சேமிப்பு கிடங்கு உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இருக்கும். அதேபோல, இதன் மூலம் நாட்டின் சேமிப்பு திறன் 14.5 லட்சம் கோடி டன்னிலிருந்து 21.5 லட்சம் கோடி டன்னாக உயரும்.
தற்போது வரை மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதில் நிலக்கடலை 9%, எள் 10.3%, நெல் 7%, ஜவ்வரிசி, பஜ்ரி, ராகி, முந்திரி, சோளம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதார விலை 10.4 சதவீத ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அரசு விவசாயிகளின் பயிர்களை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து ஹரியானாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications